காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி, அம்மன் தங்கத் தேரில் கோயில் உள்வீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழா செப். 28-ஆம் தேதி அனுக்கை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து அம்மனுக்கு நவ ஆவர்ண பூஜையும் நடைபெற்றன. தினமும் இரவு அம்மன் கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து நவராத்திரி மண்டபத்துக்கு வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காமாட்சி அம்மன் துர்க்கை அலங்காரத்தில் பவனி வந்து சூரசம்ஹாரம் செய்தார். செவ்வாய்க்கிழமை விஜயதசமியையொட்டி, காலையில் தீர்த்தவாரி, நவ ஆவர்ண பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் உள்வீதியில் அம்மன் தங்கத் தேரில் பவனி வந்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் என்.தியாகராஜன், நிர்வாக அலுவலர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.