செங்கல்பட்டை அடுத்த வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ்சுரானா தலைமை வகித்துப் பேசினார். இயக்குநர் பி.ஜி. ஆச்சார்யா, பொருளாளர் சுரேஷ்கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடற்பயிற்சி ஆசிரியர் எ.மஞ்சு விளையாட்டு தின ஆண்டறிக்கையை வாசித்தார்.
விளையாட்டு தின விழாவையொட்டி, தேசிய மாணவர் படை அணிவகுப்பு மற்றும் மாணவியரின் அணி வகுப்பும் நடைபெற்றது. தொடர்ந்து, மாணவியரின் கராத்தே, யோகா பயிற்சிகளும் நடைபெற்றன.
ஹைதராபாத் பஞ்சயோகா நிறுவனர் விகாஸ் ஷெனாய் சிறப்புரையாற்றினார். விழாவையொட்டி நடைபெற்ற தடகளப் போட்டிகள், கபடி, கோ கோ, ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தனி நபர்களுக்கான கேடயத்தை இரண்டாமாண்டு வேதியியல் மாணவி ஜீவனேஸ்வரி, வங்கி நிர்வாகவியல் மாணவி ப.சுசித்ரா ஆகியோர் வென்றனர். நிகழ்ச்சியில், முதல்வர் சி.ஷாலினி, கல்விக் குழும நிர்வாகிகள், விரிவுரையாளர்கள், மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விளையாட்டுச் செயலர் ப.அர்ச்சனா நன்றி கூறினார்.