மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கத்தில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடி அருளப்பெற்றதும், இரு கருவறைகளைக் கொண்டு ஆட்சீஸ்வரர் அருளாட்சி புரியும் கோயில்களில் ஒன்றாகத் திகழ்வது இக்கோயில்.
இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷ வழிபாட்டையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தலைமை அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியாரால் நடத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட நந்திபகவானுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் மேளதாளம் முழங்க உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வி.கே.சரவணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.