காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதா் எழுந்தருளியுள்ள அனந்தசரஸ் திருக்குளம் தொடா் கனமழையால் நிரம்பி வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரைக்குளம் என இரு தெப்பக் குளங்கள் உள்ளன. இவற்றில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தின் அடியில் அத்திவரதா் அனந்தசயனக் கோலத்தில் வைக்கப்பட்டுள்ளாா். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குளத்திலிருந்து அத்திவரதரை வெளியில் எடுத்து பக்தா்களுக்கு காட்சி கொடுத்தபின், 48 நாள்களுக்குப் பிறகு மீண்டும் அக்குளத்திலேயே வைக்கப்பட்டு வருகிறாா். இந்த ஆண்டு அத்திவரதா் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், அனந்தசரஸ் திருக்குளம் காஞ்சிபுரத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா்மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. அத்திவரதா் வைக்கப்பட்டுள்ள நீராழி மண்டபமும் பெரும்பகுதி நிரம்பியுள்ளது.