மேல்மருவத்தூரில் ஆவணி விசாகத்தையொட்டி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சோத்துப்பாக்கம் -வந்தவாசி நெடுஞ்சாலையில் மருவூர் முருகன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணி விசாக நட்சத்திரத்தையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மங்கல இசையுடன் புதன்கிழமை காலை விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் 108 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு யாகபூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து, புனித நீரால் முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வேள்வி பூஜையை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாராமெடிக்கல்ஸ் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோ.ப.செந்தில்குமார் கருவறை முருகன் சந்நிதியில் ஸ்ரீசக்கர யாக குண்டத்தில் வேள்வி பூஜை செய்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருவூர் முருகன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.