திருப்போரூரைஅடுத்த தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவச்சி குஞ்சம்மாள் உருவச்சிலைக்கு 25-ஆம் ஆண்டு ஜீவ சமாதி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோயில் ஸ்தாபகர் டாக்டர் கே.கே கிருஷ்ணன் குட்டியின் தாயார் குஞ்சம்மாள் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று பிரசவம் பார்த்து வந்தார்.
அவரது மறைவுக்குப்பின் மருத்துவச்சி குஞ்சம்மாள் உருவச்சிலை திரிசக்தி அம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
இன்றும் கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் அடைந்ததும் பிறந்த குழந்தையை மருத்துவச்சி குஞ்சம்மாள் உருவச் சிலைக்கு முன் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் நோய்கள் தீரவும் வேண்டுதல் செய்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மருத்துவச்சி குஞ்சம்மாளின் 25-ஆம் ஆண்டு ஜீவ சமாதி வழிபாட்டை அடுத்து, பாலக்காடு முண்டூர் கணக்குப் பரப்பில் உள்ள சமாதியில் வெள்ளிக்கிழமை அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து, திரிசக்தி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு புஷ்ப அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.