காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனையோ, ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என ஆட்சியர் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளம்பரப் பலகைகள், பேனர்கள்,அட்டைகள் வைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசும், உயர்நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
சாலைகளைப் பயன்படுத்துவோரின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர அட்டைகள் ஆகியனவற்றை நடைமேடைகள், நடை பாதைகள், தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ அல்லது பதிவு செய்த கட்சிகளோ வைக்கக்கூடாது.
உயர்நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை விளம்பர பேனர்களை எங்கும் வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களையும், சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களையும் அழைத்து ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி உயர்நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட எல்கைக்குள் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள், தட்டிகள் தொடர்பாக வாட்ஸ்அப் எண்: 9943907778 -இல் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்படும் விளம்பர பேனர்களின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையோ, ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.