கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் விபத்து சிகிச்சைப் பிரிவுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிமுக எம்எல்ஏ ம.தனபால் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புதுப்பட்டினத்தில் சிறிய கட்டடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை. தளவாடப்பொருள், நவீன கருவிகள் இல்லை. புதுப்பட்டினத்தைச் சுற்றியுள்ள விட்டிலாபுரம் , வாயலூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், நல்லாத்தூர், லட்டூர் போன்ற பல கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதிக்கென்று அரசு மருத்துவமனை ஏதும் இல்லை. கல்பாக்கம் நகரியத்தில் டிஏஇ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதி கிடையாது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தினந்தோறும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.விபத்திற்குள்ளாகிறவர்களுக்கும், கிராம மக்களின் அவசர சிகிச்சைக்கும், பெண்களுக்கு பிரசவ நேரத்திலும் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை ஏதும் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.
புதுப்பட்டினம் பகுதியில் மருத்துவமனை கட்டுவதற்கும் அதற்குண்டான தளவாடப் பொருள்கள் வாங்குவதற்கும் உண்டான செலவினங்களை அளிப்பதற்குத் தயாராக உள்ளதாக கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவிப்பதாகவும் அறிகிறேன். எனவே, மக்களின் நலன் கருதி புதுப்பட்டினம் பகுதியில் விபத்து சிகிச்சைப் பிரிவுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.