ரூ.15 கோடியில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் ஸ்ரீசங்கரகிருபா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பம்மல் சே.விஸ்வநாதன் சனிக்கிழமை கூறியது: காஞ்சிபுரம் ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன், கோனேரிக்குப்பத்தில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை திங்கள்கிழமை (செப்.30) திறந்து வைக்கப்படவுள்ளது.
புற நோயாளிகளுக்கு ரூ.50 கட்டணம்: சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்க சாதாரண மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் ரூ.50 கட்டணத்தில் புற நோயாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. எல் அண்ட் டி நிறுவனம் ரூ. 9 கோடி நிதியுதவி செய்திருக்கிறது. மொத்தம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இம்மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்.
மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை மாலை திறந்து வைக்கவுள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
நிகழ்வில், தலைமை நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் பாபு, மருத்துவமனை இயக்குநர் சத்யநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.