காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் மூலவருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத் திருவடியை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆசிரமத்தின் சார்பில் ஸ்ரீவராக தேசிகன் சுவாமிகள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டியிடம் சனிக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ எடையுள்ள தங்கத் திருவடி செய்யப்பட்டிருந்தது. இத்திருவடி காஞ்சிபுரத்தில் உள்ள ஆசிரமத்தின் கிளையிலிருந்து வாணவேடிக்கைகள்,மேளதாளங்கள் முழங்க வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு கேடயத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி மூலவருக்குரிய தங்கத் திருவடியை ஸ்ரீவராக மகா தேசிகன் சுவாமிகளிடமிருந்து பெற்று, கோயில் பட்டாச்சாரியார்களிடம் வழங்கினார். பின்னர், பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. தங்கத் திருவடி மற்றும் தங்கக் கவசத்துடன் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெ.மாரிமுத்து, காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர்கள் தியாகராஜன், செந்தில்குமார், வெங்கடேசன், ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆசிரம நிர்வாகி ஸ்ரீகாரியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளக்கொளி பெருமாளுக்கு தங்கக்கவசம் காணிக்கை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தங்கத்திருவடியை வழங்கிய பின்னர் ஸ்ரீவராக மகா தேசிகன் சுவாமிகள் காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அங்கு மூலவர் விளக்கொளி பெருமாளுக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள ரூ.75லட்சம் மதிப்புள்ள தங்கக்கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.
இக்காணிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி பெற்றுக் கொண்டு அதை கோயில் பட்டாச்சாரியார்களிடம் வழங்கினார். பின்னர் மூலவர் விளக்கொளி பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.