காஞ்சிவாக்கம் மற்றும் நாவலூர் ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஏரிகளில் ரூ.15.22 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்பட்டுள்ள ஏரிகளின் கரைகளில் உள்ள முட்செடிகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்துதல், மதகுகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக காஞ்சிவாக்கம் ஏரிக்கு ரூ.35 லட்சம், நாவலூர் ஏரிக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தி விவசாய சங்கப் பிரநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, திட்ட இயக்குநர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தியாகராஜன், வட்டாட்சியர் காஞ்சனமாலா, உதவிப் பொறியாளர் குஜராஜ், நாவலூர் விவசாய சங்கத் தலைவர் பொன்.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.