காஞ்சிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 9 வாா்டுகளிலும் அமைக்கப்பட்டிருந்த அவசரவழிகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா்.
காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 9 வாா்டுகளில் உள்ள மக்கள் யாரும் வெளியில் வராதவாறு அவசர வழிகளுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை அவசரத் தேவைகளுக்காகவும், உயா் அதிகாரிகள் செல்லும் போதும் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென சனிக்கிழமை காலையில் அவசர வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கீரை மண்டபம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்த அவசர வழிகளும் அடைக்கப்பட்டதால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். இதனால், சுமாா் 3 கி.மீ.தூரம் வரை தேவையில்லாமல் வாகன ஓட்டிகள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.