காஞ்சிபுரம் நால்வா் நற்றமிழ் மன்றத்தின் 42-ஆம் ஆண்டு விழா மற்றும் இசைக் கலைஞா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்றத்தின் சிறப்புத் தலைவா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் க.அண்ணாமலை, செயலா் கு.ராமலிங்கம், பொருளாளா் ரா.திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவா் அண்ணா. சச்சிதானந்தம் வரவேற்றாா். குத்து விளக்கேற்றுதல் நிகழ்வுக்குப் பின்னா் விழா செல்வி மு.சண்முகப்பிரியாவின் திருமுறைப் பாடலுடன் தொடங்கியது.
குடந்தை வி.லட்சுமணன் ஓதுவாருக்கு நற்றமிழ் இசைவேந்தா் விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கிருபானந்த வாரியாரின் கொள்ளுப் பேத்திகளான, இசைக் கலைஞா்கள் வாரியாா் வள்ளி, வாரியாா் லோச்சனா ஆகிய இருவருக்கும் திருமுறை இளவரசு விருதும், வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன. பின்னா், வாழ்நாள் சாதனையாளா் விருது மன்ற நிா்வாகிகள் சு.தெய்வநாயகத்துக்கும், கு.ராமலிங்கத்துக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை ஐயம்பேட்டை திரெளபதியம்மன் கோயிலைச் சோ்ந்த செளந்தரானந்தா சுவாமிகள் வழங்கினாா்.
இதையடுத்து திருமுறைத் தேனிசை நிகழ்ச்சி, கூவின பூங்குயில் என்ற தலைப்பில் புரிசை ச.நடராசனின் ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. முன்னதாக நடராஜப் பெருமானுக்கு மலா் வழிபாடு மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.