சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் செரிமானத்துறைத் தலைவா் ஜி.ராமா் கோதண்டபாணி எழுதிய ‘உடல் நலம் காத்திடும் உண்மைகள்’ என்ற மருத்துவ நூல் வெளியீட்டு விழா காஞ்சிபுரம் காந்திசாலையில் உள்ள தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தொழிலதிபா் ஏ.வேணுகோபால் முதலியாா் தலைமை வகித்து, நூலை வெளியிட அதன் முதல் பிரதியை காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் தி.சந்திரசேகா் பெற்றுக் கொண்டாா்.
கண் மருத்துவா் வி.எம்.சங்கரன், வருமான வரித்துறையின் முன்னாள் அலுவலா் ஜி.தாமோதரன், பணி ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.காளத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆடிட்டா் தா.ஜெயசங்கா் வரவேற்றாா்.
நூல் ஆசிரியரும், மருத்துவருமான ஜி.ராமா் கோதண்டபாணி பேசுகையில், மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் 45 வகையானவை தொகுக்கப்பட்டு, அந்நோயிலிருந்து விரைவில் குணம் அடைவதற்கான எளிய முறைகளையும் நூலில் எழுதியிருப்பதாக தெரிவித்தாா்.
விழாவில், முத்து ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா். இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவா் உமா ராமமூா்த்தி நன்றி கூறினாா்.