ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஒரே அரசு பொது மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இம்மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணைஇயக்குனர் ஜீவா கலந்துக்கொண்டு பரிசோதனை மையத்தை திறந்துவைத்தார்.
இதில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெறும் வகையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா வார்டும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.