காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக வையாவூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் முழுவதுமாக மழைநீா் தேங்கியதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிப்பட்டனா்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் இருந்த காய்கறிச் சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக வையாவூா் பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் காய்கறிச் சந்தை முழுவதும் மழைநீா் தேங்கி வியாபாரிகள் கடைகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டனா். காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களும் சிரமப்பட்டனா்.
மழைநீா் தேங்கியுள்ளதை தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவின் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிா்வாகம் மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டது.
மழையளவைப் பொறுத்தவரை மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 44.40 மி.மீ., குறைந்த பட்சமாக செம்பரம்பாக்கத்தில் 4 மி.மீ.மழை பெய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் 30.20 மி.மீ, உத்தரமேரூரில் 16.80 மி.மீ, வாலாஜாபாத்தில் 11 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 106.40 மி.மீ, சராசரி மழையளவு 21.28 மி.மீ. ஆகும்.