காஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்தூர் பகுதியில் ரூ 55.85 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய நீர்தேக்கப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவடையும் என வெள்ளிக்கிழமை நீர்தேக்கப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்திய தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்தியகோபால் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில், வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ரூ 55.85 கோடி மதிப்பீட்டில், ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூர் கிளையாற்றில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து சுமார் 760 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த புதிய நீர்தேக்கத்தில் சுமார் 750 மில்லியன் கன அடி வெள்ளநீர் சேரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த நீர்தேக்கத்தை அம்மணம்பாக்கம், மற்றும் படப்பை ஏரிகளின் வழியாக மணிமங்கலம் ஏரியுடன் உள்படுகை நீர்மாற்று கால்வாயும் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு மணிமங்கலம் ஏரியில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒரத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணியை தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்தியகோபால் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுடன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தி நீர்தேக்கப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், நீர்தேக்கத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டுவைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஏரியில், ரூ 47.64 லட்சம் மதிப்பீட்டிலும், வடமங்கலம் ஏரியில் ரூ 52.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் அடையாறு கிளையாற்றில் ரூ 4.50 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்துடன் கூடிய தடுப்பனையும், வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்கு பின் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் சத்தியகோபால் செயிதியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, வெள்ள பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளின் கீழ், தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், சிட்டலபாக்கம் மற்றும் நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் மூடுகால்வாய்கள் ( பெரு வடிகால்வாய்கள்) அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய திட்டமாக ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய ஏரிகளை இணைத்து ரூ 55.85 கோடி மதிப்பீட்டில் ஒரு பெரிய நீர்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நீர்தேக்கத்தின் மூலம் 0.75 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்க முடியும்.
இந்த நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரிநீரை நீர்மாற்று உள்படுகை கால்வாய் மூலமாக மணிமங்கலம் ஏரியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் மற்ற ஏரிகளுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்கிறோம். அப்போது தான் வடகிழக்கு பருவ மழையின் நீரை நீர்தேக்கத்தில் தேக்கிவைக்க முடியும் என்றார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்மன், உதவி பொறியாளர்கள் மார்கண்டன், குஜராஜ் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.