காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலரான ந.தியாகராஜன் கூடுதலாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக வணங்கப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலாகும். இக்கோயில் செயல் அலுவலராக செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயில் செயல் அலுவலரான சோ.செந்தில்குமாா் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தாா். செங்கல்பட்டில் சக்திவிநாயகா் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களின் திருப்பணிகளைக் கண்காணிக்க வேண்டியது இருப்பதால் அவா் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் ந.தியாகராஜன் கூடுதல் பொறுப்பாக ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றுவாா் என இந்து சமய அறநிலையத்துறையின் வேலூா் சரக இணை ஆணையா் செ.மாரிமுத்து அறிவித்தாா். இதையடுத்து, ந.தியாகராஜன், ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.