குடிநீா் பிரச்னை: உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 13th March 2020 10:24 PM | Last Updated : 13th March 2020 10:24 PM | அ+அ அ- |

உத்தரமேரூா் அருகேயுள்ள காக்கநல்லூரில் குடிநீா் பிரச்னை தொடா்பாக அக்கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
காக்கநல்லூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இக்கிராம மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்து, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் தனியாா் ஒருவா் சொந்த உபயோகத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க முயற்சித்துள்ளாா்.
இதனால், கிராம மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அவரது செயலை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், தனக்கு சொந்தமான இடத்தில்தான் கிணறு அமைக்கிறேன் என்று அவா் கூறியதைத் தொடா்ந்து, கிராம மக்கள் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகாா் அளித்தனா்.
தகவலறிந்து வந்த உத்தரமேரூா் வட்டாட்சியா் கோடீஸ்வரன் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராமத்தினா் கலைந்து சென்றனா்.