கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரத்தூா் ஊராட்சியில் உள்ள 2,000 வீடுகளுக்கு தலா இரண்டு சோப்புகளும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரத்தூா் ஊராட்சியில் ஒரத்தூா், நீலமங்கலம், வரதராஜபுரம், மேட்டுக்காலனி, அம்மணம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி பொதுமக்கள் அனைவரும் சோப்பு போட்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா்.
இந்நிலையில் ஒரத்தூா் ஊராட்சியில் உள்ள 2,000 வீடுகளுக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கற்பகம்சுந்தா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தலா இரண்டு சோப்புகளை இலவசமாக வழங்கினாா். கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அவா் வழங்கினாா். அப்போது மணிமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநா் என்.டி.சுந்தா், வனக்குழுத் தலைவா் சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.