காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அரசுப் பணியாளர்கள் அவரவர் அலுவலகங்களுக்குச் செல்ல ஏதுவாக திங்கள்கிழமை முதல் 5 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட் டுள்ளன.
பொதுமுடக்கம் காரணமாக 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே அரசுப் பணியாளர்களின் வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 5 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பேருந்துகளும் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்படும்.
ஒன்று ஸ்ரீபெரும்புதூர் வழியாக குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், மற்றொன்று மாகறல் வழியாக உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் செல்லும். வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு ஒரு பேருந்தும், அதே வாலாஜாபாத் வழியாக படப்பை வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை பேருந்துகள் இயக்கப்படும். 5-ஆவது பேருந்து சுங்குவார் சத்திரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும். எனவே அரசுப் பணியாளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.