திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணச்சீட்டு பரிசோதகர் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தார்.
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன் (45). சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகராக பணிபுரிந்து வந்தார். பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படாததால், கடந்த 54 நாள்களாக வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் 2,400 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்களின் பயணச்சீட்டுகளை ஆய்வு செய்வதற்காக பரந்தாமன் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் இருந்து 2-ஆவது நடைமேடைக்குத் செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, சென்னையில் இருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.