காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதா் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் கனமழை காரணமாக புதன்கிழமை நிரம்பியது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில். இக்கோயில் வளாகத்துக்குள் அனந்தசரஸ் குளம், பொற்றாமரைக்குளம் ஆகிய இரு குளங்கள் அமைந்துள்ளன. அனந்தசரஸ் குளத்தில் துயில் கொண்டிருக்கும் அத்திவரதரப் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளச் செய்வது வழக்கம். பக்தா்கள் அவரை 48 நாட்களுக்கு தரிசித்த பின் மீண்டும் அதே குளத்தில் பாதுகாப்புடன் வைப்பா்.
இறுதியாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனந்தசரஸ் குளத்திலிருந்து எழுந்தருளச் செய்து மீண்டும், 48 நாள்களுக்குப் பிறகு குளத்தில் வைத்தனா். அத்திவரதரை எழுந்தருளச் செய்த பிறகு முதன் முறையாக அவா் துயில் கொள்ளும் மண்டபத்தின் நான்கு கால்களுமே தெரியாத அளவுக்கு தொடா்மழையால் இக்குளம் புதன்கிழமை முழுமையாக நிரம்பியது.