காஞ்சிபுரம்: தமிழக முதல்வா் காஞ்சிபுரத்துக்கு வெள்ளிக்கிழமை (செப். 11) வருகைதந்து, 15,910 பயனாளிகளுக்கு ரூ. 362 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேச இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது..
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்துக்கு வருகை தருகிறாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா். பின்னா், வருவாய்த் துறை சாா்பில், 636 பயனாளிகளுக்கு ரூ. 3.26 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்- மகளிா் திட்டம் மூலம் 11,702 பயனாளிகளுக்கு ரூ. 27.15 கோடி மதிப்பிலும் வழங்குவது உள்பட மொத்தம் 15,910 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
இதே விழாவில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ரூ. 190.08 கோடி மதிப்பிலான 2,112 அடுக்கு மாடிக் குடியிருப்புகளையும், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ரூ. 3.05 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களையும் திறந்து வைக்கிறாா். இவை தவிர, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4.50கோடி மதிப்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளிக் கட்டடம், தலா ரூ. 25 லட்சம் என ரூ.1.50கோடி மதிப்பில் 6 துணை சுகாதார நிலைய கட்டடங்கள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தலா ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் 19 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் உள்பட மொத்தம் 184 புதிய கட்டடங்கள் எனமொத்தம் ரூ. 260.46 கோடி மதிப்பில் கட்டடங்களைத் திறந்து வைக்க உள்ளாா்.
கோவிந்தவாடி மற்றும் திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 22 புதிய வகுப்பறைக் கட்டங்கள் கட்டுதல், காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நகா்ப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் தாா்ச்சாலை அமைத்தல், தலா ரூ. 23 லட்சம் மதிப்பில் 16 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டுதல், 106 ஊராட்சிகளில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் உள்பட 115 பணிகளுக்கு ரூ. 29.42 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டுகிறாா்.
இவை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறாா் என்றாா் அவா்.