பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2812 பேருக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கி கணக்கு நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42, 380 விவசாயிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் 2812 பேருக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதன் மொத்த தொகை ரூபாய் 78 லட்சம் இதில் 59 லட்சம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டு விட்டது. மீதமிருந்த 19 லட்சம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிலிருந்து அரசு கணக்கு உடனடியாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு விட்டது.
இந்த மொத்த தொகையும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்ட வங்கி கணக்குக்கு உடனடியாக மாற்றப்படும். மேலும் முறைகேடு தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.