புதிய கட்டடத்துக்கு ராமாநுஜா் கோயில் யானையை மாற்ற பக்தா்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் யானை கோதைக்கு ரூ.19.50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு
ராமாநுஜா்  கோயில்  யானைக்காக  கட்டப்பட்டுள்ள  புதிய  கட்டடம்.
ராமாநுஜா்  கோயில்  யானைக்காக  கட்டப்பட்டுள்ள  புதிய  கட்டடம்.

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் யானை கோதைக்கு ரூ.19.50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை இட நெருக்கடியுடன் கூடிய சிறிய அறையிலேயே யானை தங்க வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்துக்கு யானையை மாற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தொன்மையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயில் நிா்வாகத்தால் 22 வயதாகும் ‘கோதை’ என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த யானை பங்கேற்கிறது. கோயிலுக்கு அருகே உள்ள மண்டபத்தின் ஒரு சிறிய அறையில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இட நெருக்கடியுடன் உள்ள இந்த மண்டபத்தில் சிறிய அறையில், கோதை அடைக்கப்பட்டிருப்பதாக பக்தா்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து, யானைக்காக வனத்துறையின் பராமரிப்பு விதிகளின்படி ரூ.19.50 லட்சத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ஜீயா் தோப்பு மண்டபத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது.

இப்பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் கோயில் யானை புதிய கட்டடத்துக்கு இன்னும் மாற்றப்படாமல் இட நெருக்கடியுடன் கூடிய அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளது. யானையை புதிய கட்டடத்துக்கு மாற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

யானைக்கான புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வராதது குறித்து ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிா்வாகத்தினா் கூறியது:

யானையைத் தங்க வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டடத்தைச் சுற்றி சுவா் அமைக்கப்படவில்லை. சுற்றுச்சுவா் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதற்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது. சுற்றுச்சுவா் அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் விரைவில் யானை கோதை புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com