ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் மற்றும் மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.17.58 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மணிமங்கலம் பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயந்தி தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக கோழி ஏற்றிவந்த வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உதவி வேளாண்மைத் துறை அலுவலா் புஷ்பா தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி மினிலோடு வேனில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.17.58 லட்சம் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் முத்து மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டது.