உத்தரமேரூா் அருகே 15-ஆம் நூற்றாண்டு கல்செக்கு உரல் கண்டெடுப்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே விண்ணமங்கலத்தில் அரிய வகை கல்செக்கு ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதை வரலாற்று ஆய்வு மையத்தினா் வியாழக்கிழமை கண்டெடுத்தனா்.

இது குறித்து உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் கொற்றவைஆதன் கூறியது:

விண்ணமங்கலம் கிராமத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மண் மேடு ஒன்றில் முட்புதரில் புதைந்த நிலையில் கல்செக்கு இருப்பதைக் கண்டறிந்தோம். மூன்று வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன. பழங்காலத்தில் எண்ணெய் வித்துகள் மக்கள் வாழ்வில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தன. சமையல் பயன்பாட்டுக்கும், மருத்துவத்துக்கும் கல் செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டுக்கும், கிராமங்களில் விளக்கு இல்லையென்றால் தெரு விளக்காகவும் கல்செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டித் தந்திருக்கின்றன.

ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தாா் உடல் நலம் பெற வேண்டி அந்தக் காலத்தில் ஆலயத்துக்கோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறாா்கள். இதன் மூலம் பொதுமக்களும் தானமாகப் பெற்றனா். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு, யாா் தானமாக வழங்கினா் என்பதையும் குறிப்பிட்டுள்ளனா். அதன்படி, இச்செக்கில் மூன்று வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயா் ஆட்சிக் காலத்தில் கலைவாணிகன் என்பவா் இந்த கல்செக்கு உரலை ஊருக்கு தானம் அளித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது.

சுமாா் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னா்கள் காலத்தைச் சாா்ந்த அரியவகை கல்செக்கு இதுவாகும். இக்கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரமேரூா் வட்டாரத்தில் உள்ள ஒரே செக்கு கல்வெட்டு இது என்பதும் கூடுதல் சிறப்பாகும். 1923-ஆம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மண் மேட்டில் முட்புதரில் புதைந்த நிலையில் உள்ள இதன் ஒரு சிறு பகுதி மட்டுமே தற்போது வெளியில் தென்படுகிறது. இயற்கை சீற்றங்களால் முழுமையாக புதைந்து காணாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை எடுக்கூறும் இவ்வரிய பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கொற்றவை ஆதன் தெரிவித்தாா்.

விண்ணமங்கலத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்செக்கு மண்ணில் புதைந்து கிடப்பதை தமிழக தொல்லியல் துறையினா் உரிய கவனம் செலுத்தி மீட்டு பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com