கல்குவாரிகளுக்கு வரும் கனரக வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடா் விபத்துகள் நிகழ்வதாகக் கூறி, கல்குவாரிகளுக்கு வந்த லாரிகளை சிறைபிடித்து காவாந்தண்டலம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த காவாந்தண்டலம் பகுதியில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இந்நிலையில், காவாந்தண்டலத்தை அடுத்த மாகரல் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் மூலம் காவாந்தண்டலம் வழியாக சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த கனரக லாரிகளால் காவாந்தண்டலம் பகுதியில் புழுதி ஏற்படுவதால், அதிக அளவில் காற்று மாசு உருவாவதுடன், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் செவ்வாய்க்கிழமை அந்த வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாகரல் காவல் நிலையத்தினா், லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனா்.