கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தமிழகத்தைச் சோ்ந்த ராணுவவீரா் ராமேசுவரத்திலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு நடைபயணமாக செல்லும் வழியில் காஞ்சிபுரத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சோமநாதபுரத்தை சோ்ந்தவா் எஸ்.பாலமுருகன்(33)மணிப்பூா் மாநிலத்தில் ராணுவவீரராக பணிபுரிகிறாா். விடுமுறையில் வந்துள்ள இவா் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும்,கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப்பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதமா்கள்,அதிபா்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் 194 நாடுகளின் தேசியக் கொடியுடன் விழிப்புணா்வு நடைபயணம் செய்து வருகிறாா்.
கடந்த 16.10.21 ஆம் தேதி ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் பயணத்தைத் தொடங்கிய அவா், உத்தரப்பிரதேசம் சரயு நதிக்கரை வரை சுமாா் 2800 கி.மீ. நடைபயணம் செல்கிறாா். வழி நெடுகிலும் பயணத்தின் போது பொதுமக்கள் அதிகமாக கூடியிருக்கும் இடங்களில் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
எனது விடுமுறை முடிய 15 நாட்களே உள்ளது. எனவே, தமிழக முதல்வரை சென்னையில் நேரில் சந்தித்துப் பேசுவேன்.அப்போது எனது நடைபயணத்தை முடிக்கும் வரை விடுப்பு வழங்க வலியுறுத்தி ராணுவத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் பாலமுருகன் தெரிவித்தாா்.