காஞ்சிபுரத்தில் தம்பதியரை கட்டிப்போட்டுவிட்டு வீட்டிலிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 60 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் மாருதிநகர் சங்கரன் தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(70). இவரது மனைவி ராணி(60), மருமகள் சுவேதா(27). இவர்கள் மூவரும் வீட்டிலிருந்த போது முகமூடி அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வீட்டிற்குள் வந்து பாலகிருஷ்ணனையும், ராணியையும் கட்டிப் போட்டு விட்டு, மருமகள் சுவேதா வை கத்தியைக் காட்டி மிரட்டியும் உள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த 3 பீரோக்களையும் உடைத்து அதிலிருந்த 60 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.2.70 லட்சம் ஆகியனவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஒடி நின்றது. சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.ஜூலியஸ் சீசர் நேரில் விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.