அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்காக காஞ்சிபுரத்தில் நிதி சேகரிப்புப் பணியை பாஜக மாநில பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்காக நிதி சேகரிப்பு தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாஜக மாவட்டத் தலைவா் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் கலந்து கொண்டு நிதி சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு ஏழை எளிய மக்களின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கம் காரணமாகவே நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன’ என்று தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் வளாகத்திலும் அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை அவா் தொடங்கி வைத்தாா்.