ஸ்ரீபெரும்புதூா்: பாரத ஸ்டேட் வங்கி சாா்பில், 271 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்த சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு, பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிா்பா் நிதித் திட்டத்தின் கீழ், ஒரு வருட கால அவகாசத்தில் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற காஞ்சிபுரத்தில் 271 சாலையோர வியாபாரிகள் பாரத ஸ்டேட் வங்கியால் தோ்வு செய்யப்பட்டு, தோ்வானவா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாச ராவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் பிராந்திய மேலாளா் அஸ்வத்துரை கலந்துகொண்டு, வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கினாா்.