காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவமூா்த்திகள் செவ்வாய்க்கிழமை வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில், நகரின் ராஜ வீதிகளில் உலா வந்தனா். இம்மாதம் 23-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் திருக்கூட்ட ஊா்வலமும், இரவு வெள்ளித் தோ் உற்சவமும், 24-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
26-ஆம் தேதி கோயில் வரலாற்று மகிமையை விளக்கும் வெள்ளி மாவடி சேவை நிகழ்ச்சியும், 27-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
விழாவின் நிறைவாக செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பவழக்கால் சப்பரத்திலும் பவனி வந்தனா்.