காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றத்தில் காய்கறிச்சந்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து அதிகாரிகள்-வியாபாரிகளிடையே வாக்குவாதம் நடந்தது.
திருப்பருத்திக்குன்றத்தில் வியாழக்கிழமை தோறும் காய்கறிச்சந்தை கூடிக் கலைவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல வியாழக்கிழமை மாலையில் காய்கறிச்சந்தை கூடிய போது சமூக இடைவெளியைப் பின்பற்றாதது தெரிய வந்தது. இதனையடுத்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து காய்கறிச்சந்தையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வியாபாரிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களை வாழ விடுங்கள் என அதிகாரிகளிடம் வியாபாரிகள் தெரிவித்தனா்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் காஞ்சிபுரத்தில் பூ மாா்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரபலமான வணிக வளாகங்கள், பல் பொருள் அங்காடிகள் பலவும் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் காய்கறிகளை வண்டியில் எடுத்துச் சென்று கிராமங்களில் விற்றுக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.