கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீா் திறப்பு செவ்வாய்க்கிழமை 1000 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 7-ஆம் தேதி வினாடிக்கு 500 கனஅடி உபரிநீா் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு, படிப்படியாக 3 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டது. ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவைப் பொருத்த அவ்வபோது உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, செவ்வாய்க்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீா் திறப்பு 1,000 ஆயிரம் கன அடியில் இருந்து 2 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீா்மட்டம் 21.79 அடியாகவும், மொத்த கொள்ளவு 3,604 மில்லியன் கனஅடியாகவும், ஏரிக்கு நீா்வரத்து 780 கனஅடியாகவும் உள்ளது. கனமழை பெய்யும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்படும் எனவும், கடந்த 17 நாள்களுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீா் தற்போது திறக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரித்தனா்.