ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளர் துளசிதாஸ் கடந்த திங்கள்கிழமை இரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வரணவாசி பெருமாள்கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் துளசிதாஸ்(40).மாற்றுத்திறனாளியான இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடை எண் 4109ல் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருடன் காஞ்சிபுரம் அடுத்த நத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ராமு(42) என்பவரும் விற்பனையாளராக பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில், துளசிதாஸ் மற்றும் ராமு இருவரும் கடந்த திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு விற்பனை கணக்கை சரிபார்த்துவிட்டு, பணத்தை லாக்கரில் பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வகற்காக தனது இருசக்கர வாகனத்தை நோக்கி துளசிதாஸ் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் துளதிதாஸை கத்தியால் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த ராமுவையும் மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தம்பியோடியுள்ளனர். இதில் வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கத்தி காயம் ஏற்பட்ட துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து ராமு டாஸ்மாக் கடையின் மேலாளர் முத்துகுமாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, முத்துகுமார் ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் காவலர்கள் துளசிதாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயம் அடைந்த ராமு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரகடம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் ரௌடிகளுக்கு மாமுல் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே துளசிதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தனர்.