காஞ்சிபுரம் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்சிலைகள் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகேயுள்ள அரசாணி மங்கலம் கிராமத்தின் வயல்வெளிப் பகுதியில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கற்சிலைகளை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் புதன்கிழமை கண்டெடுத்துள்ளனர்.
ஜேஷ்டாதேவி மற்றும் அய்யனார் சிலை
ஜேஷ்டாதேவி மற்றும் அய்யனார் சிலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள அரசாணி மங்கலம் கிராமத்தின் வயல்வெளிப் பகுதியில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கற்சிலைகளை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் புதன்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ளது அரசாணிமங்கலம் கிராமம்.இக்கிராம வயல்வெளியில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜேஷ்டாதேவி சிலையும், அய்யனார் சிலை ஒன்றையும் உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது:

அரசாணி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் கொடுத்த தகவலின்படி எமது வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அக்கிராமத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அக்கிராமத்தின் காளியம்மன் கோயில் அருகேயுள்ள வயல்வெளியில் பல்லவர்களின் இறுதிக்காலத்தை சேர்ந்த இரு கற்சிலைகளை கண்டறிந்தோம். அதில் ஒன்று மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலையாகும்.இச்சிலையானது அக்கிராமத்தில் கோட்டைமேடு வயல்வெளிப் பகுதியில் இரண்டரை அடி உயரம் இரண்டு அடி அகலத்தில் அமர்ந்த நிலையில் மண்ணில் புதைந்து காணப்பட்டது.

இவரது வலப்பக்கம் அவரது மகன் மாந்தனும்,இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் உள்ளனர்.வலப்பக்கத்தில் காக்கை கொடி,தலையில் கரண்ட மகுடம்,காதில் மகர குண்டலம்,கழுத்தில் சரப்பள்ளி ஆபரணம்,மார்பில் சன்ன வீரம்,தோல்களில் வாகு வளையங்கள்,கைகளில் வளையல்கள்,பருத்த வயிரோடு விரிந்த கால்கள்,இடையிலிருந்து பாதம் வரை நீண்ட ஆடை ஆகியன உடைய அழகிய படைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது.இவர் திருமாலின் மனைவியான லட்சுமியின் சகோதரி ஆவார்.இவர் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களிலும் திருவள்ளுவர், அவ்வையார் போன்ற புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.பல்லவர் காலத்தில் நந்தி வர்ம பல்லவனின் குல தெய்வமாகவும் இருந்துள்ளார்.

இரண்டாவதாக அதே கிராமத்திலிருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் மூன்றரை அடி உயரத்திலும்,2 அடி அகலத்திலும் அய்யனார் கற்சிலை ஒன்றையும் கண்டறிந்தோம்.இவரது தலையில் ஜடாமுடி சிகை அலங்காரம், காதுகளில் பத்ர குண்டலம்,கழுத்தில் அணிகலன்களாக கண்டிகை மற்றும் சரப்பள்ளி,மார்பில் முப்புரி நூல், தோளில் வாகு வளையல்கள்,கைகளில் காப்பும் அணிந்தவாறு காணப்படுகிறது.வலது காலை தொங்க விட்டுக் கொண்டும்,இடது காலை மடித்தும்,வலக்கையில் செண்டை ஏந்தியும்,இடக்கையை கால் முட்டியின் மீது வைத்தும் ஒரு இருக்கையில் அமர்ந்து அழகிய படைப்புச் சிற்பமாக காட்சியளிக்கிறார்.இவரது இடையில் முடிச்சுகளுடன் கூடிய ஆடை தொடைவரை நீண்டு காணப்படுகிறது.இதை முழுவதுமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்த பிறகே முழுவிபரத்தையும் அறிய முடியும்.

கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்துக்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரிய காணக்கிடைக்காத பொக்கிஷங்களை காப்பது நமது கடமையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com