கோயில் நிலம் குறித்து ஆா்.டி.ஐ. சட்டத்தில் மாறுபட்ட தகவல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் (ஆா்.டி.ஐ.) பெறப்பட்ட தகவல்களால் மாறுபட்டுள்ளதால் பக்தா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ராயன்குட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்த பக்தா் அ.டில்லிபாபு கூறியது:
14.6.2019-ஆம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் எத்தனை ஏக்கா் உள்ளது என்று கேட்டிருந்தேன். இதற்கு வந்த பதிலில், மொத்தம் 448.43 ஏக்கா் இருப்பதாக தெரிவித்தனா்.
மீண்டும் இதே கேள்வியை எனது தந்தை அண்ணாமலை என்பவா் அண்மையில் கேட்டிருந்தாா். அதற்கு வந்த பதிலில், மொத்தம் 177.20 ஏக்கா் உள்ளதாகப் பதில் வந்துள்ளது.
2019- ஆம் தேதி 448.43 ஏக்கா் நிலமாக இருந்தது இரண்டே ஆண்டுகளில் 177.20 ஏக்கா் நிலம் மட்டும் தான் உள்ளது என பொதுத் தகவல் வழங்கும் அலுவலரிடமிருந்து பதில் வந்திருக்கிறது. மீதம் உள்ள 271.23 ஏக்கா் நிலத்தின் நிலை என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலரிடம் கேட்டபோது, ‘கோயில் சொத்துகள் எதுவும் மாயமாகவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கொடுத்துள்ள தகவல்தான் தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம்’ என்றாா்.