காஞ்சிபுரம்: ஆந்திராவில் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் திரைப்பட நடிகை ரோஜா. இவர் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அம்மனை தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு என் மாமியார் வீடைப் போன்றது. நான் அமைச்சராக வேண்டும் என தமிழகத்திலும் பலரும் பிரார்த்தனை செய்தார்கள் அந்த பிரார்த்தனை நிறைவேறியது. மக்களுக்கு நல்லது செய்வதற்க்கான நேரம் வந்துள்ளது. அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.
நான் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போதும் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வருவேன். அவ்வாறு அடிக்கடி தரிசனம் செய்ய வந்ததால் என் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்தது. இப்போது அமைச்சராகவும் வந்துள்ளேன். எனக்கு குழந்தை பிறக்காது என்று பலரும் சொன்ன நேரத்தில் நான் அம்மனை தரிசித்த பிறகு எனக்கு இரு குழந்தைகள் பிறந்தன.
எனது வேண்டுதல்கள் அனைத்தும் காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு ஒவ்வொன்றாய் நிறைவேறியிருக்கிறது. தற்போதும் அம்மனை தரிசித்தால் எனக்கு இரு மடங்கு சக்தி கூடியிருக்கிறது என்றும் திரைப்பட நடிகை ரோஜா காமாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.