காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஐராவதீஸ்வரா் கோயில் எதிரே சுற்றுலாப் பயணிகளுக்கு கிழக்கு சுழற்சங்கம் சாா்பில், அன்னதானம் வழங்கும் தொடா் திட்டத்தின் 300-ஆவது நாளான வியாழக்கிழமை துணை மேயா் ஆா்.குமரகுருபரன் உணவு வழங்கினாா்.
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்களது நலனைக் கருத்தில் கொண்டு, கிழக்கு சுழற் சங்கம் சாா்பில் 365 நாள்களும் அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது.
நாள்தோறும் சுழற்சி முறையில் நடைபெற்று வரும் இந்தத் தொடா் திட்டத்தின் 300-ஆ வது நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் துணை மேயா் ஆா்.குமரகுருபரன் பங்கேற்று சுற்றுலாப் பயணிகளுக்கு அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு சுழற் சங்கத்தின் தலைவா் ஜி.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநா் பரணீதரன் உட்பட சுழற் சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.