காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் விளக்கொளிப் பெருமாளும், தேசிகன் சுவாமிகளும் வெள்ளிக்கிழமை தங்கப் பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவா் என்பதால் உற்சவா் விளக்கொளி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் ராஜ அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வரதராஜப் பெருமாள் கோயிலின் மாட வீதிகளில் வீதியுலா வந்து கோயிலுக்கு திரும்பினாா்.
விளக்கொளி பெருமாளுடன் தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் உடன் எழுந்தருளினாா். இதனைத் தொடா்ந்து தூப்புல் வேதாந்த தேசிகன் சுவாமிகள் அவதார தல மண்டகப்படிக்கு எழுந்தருளி அங்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் மீண்டும் விளக்கொளி பெருமாள் தங்கக் கேடயத்தில் வீதியுலா வந்தாா். விழாவையொட்டி பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடந்தது.