காஞ்சிபுரம் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரமோத்சவம் வரும் மார்ச் 8 ஆம் தேதி தொடங்க இருப்பதை முன்னிட்டு பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி தொடர்பான பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.
இதனையடுத்து பந்தக்கால்களுக்கு கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடந்து பந்தக்கால்கள் ஆலயத்தின் முன்பாக நடப்பட்டன. விழாவில் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர். ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி தொடங்குகிறது.
இவ்விழாவில் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் ஏகாம்பரநாதரும், ஏலவார் குழலி அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர். மார்ச் 11ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 12 ஆம் தேதி அதிகார நந்தி வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. 13 ஆம் தேதி 63 நாயன்மார்கள் புறப்பாடும் அன்று இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
14 ஆம் தேதி தேரோட்டம். 16 ஆம் தேதி கோயிலின் வரலாற்றை விளக்கும் மாவடி சேவை நிகழ்ச்சியும்,18 ஆம் தேதி அதிகாலையில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.இதனையடுத்து மார்ச் 20 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் பிரமோத்சவம் நிறைவு பெறுகிறது.