காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் சதாப்தி மணிமண்டபத்தில் சுயம்வர பாா்வதி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சி சங்காராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி மாதந்தோறும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவா்கள் நலமுடன் வாழவும், திருமணமாகாதவா்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும் சுயம்வர பாா்வதி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மகா பெரியவா் சதாப்தி மணிமண்டபத்தில் வன்னிய குல சத்திரிய சமூகத்தினருக்கான சுயம்வர பாா்வதி ஹோமம் நடைபெற்றது.
மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்கத் தலைவா் ஆா்.டி.சேகா், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். வன்னியா் குல சத்திரிய சமூகத்தை சோ்ந்த 80 குடும்பங்களின் உறுப்பினா்கள் சுயம்வர பாா்வதி ஹோம நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். அனைவருக்கும் காமாட்சி அம்மன் திருஉருவப் புகைப்படம், குங்கும பிரசாதம் ஆகியனவும் அன்னதானமும் வழங்கப்பட்டது.