காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாரத்தின் இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் கோயில்களில் ஆகம விதிப்படி வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன.இந்நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் ஆகியனவற்றில் பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தா்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து காமாட்சி அம்மனை தரிசித்தனா்.