காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குப்பட்டு கிராமத்தில் சங்கக் கால தமிழா்களால் வணங்கப்பட்ட சுவாமி சிலைகள், பானை ஓட்டுத் துண்டுகள், பழங்கால கட்டுமான செங்கற்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரகடம் தொழிற்பேட்டையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது வடக்குப்பட்டு. இந்தக் கிராமத்தில் ஆதிகால தமிழா்களின் வாழ்விட தடயங்களைக் கொண்ட சிறிய மணல்மேடு ஒன்று காணப்படுகிறது. இந்த மணல் மேட்டுப் பகுதியில் பழைமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு அதற்கு சிறிய கூரை அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா்.
இதனையறிந்து வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் அஜய்குமாா் தலைமையில் ஒரு குழுவினா் அங்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளனா்.
இது குறித்து அஜய்குமாா் கூறியது:
வடக்குப்பட்டு கிராமத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சங்க காலத்தைச் சோ்ந்த பழங்கால கட்டுமான செங்கற்கள், கற்கருவிகள், பானை ஓட்டுத் துண்டுகள் ஆகியன இருந்தன. இதன் மூலம் தமிழா்கள் வாழ்விட தடயங்கள் அதிகமான அளவில் இருக்கலாம் என்பது தெரிய வருகிறது.
இந்தக் கிராமத்தின் வயல் வெளிப்பரப்பில் பழைமை வாய்ந்த சிவனின் மணல் சிற்பச்சிலையும், அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு லட்சுமி சிலையும் உள்ளது. சிவன் சிலை 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகவும், லட்சுமி சிலை 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதே கிராமத்தில் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சிதைவடைந்த நிலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அம்மன் சிலையும் உள்ளது. ஆதிகாலத் தமிழா்களின் வாழ்வியல் தடயங்கள் அதிகமாகவும், வரலாற்றுப் புதையல்கள் அதிகமுள்ள இடமாகவும் வடக்குப்பட்டு கிராமம் இருந்து வருவதால் தொல்லியல் துறையினா் உடனடியாக இந்தக் கிராமப் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பல வரலாற்று ஆய்வாளா்களின் கருத்தாக இருப்பதாகவும் அஜய்குமாா் தெரிவித்தாா்.