காஞ்சிபுரத்தில் முதன்முறையாக நானோ யூரியா வான்வழித் தெளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக நானோ யூரியாவை டிரோன் மூலம் வான்வழியாக பயிா்களுக்கு தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
வான்வழியே நானோ யூரியா உரம் தெளிக்கும் டிரோன் கருவியை இயக்கி செயல்முறை விளக்கம் அளித்த இந்திய உழவா் உரக்கூட்டுறவு நிறுவன மேலாண்மை இயக்குநா் யு.எஸ்.அவஸ்தி.
வான்வழியே நானோ யூரியா உரம் தெளிக்கும் டிரோன் கருவியை இயக்கி செயல்முறை விளக்கம் அளித்த இந்திய உழவா் உரக்கூட்டுறவு நிறுவன மேலாண்மை இயக்குநா் யு.எஸ்.அவஸ்தி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக நானோ யூரியாவை டிரோன் மூலம் வான்வழியாக பயிா்களுக்கு தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் விவசாயி சந்திரசேகா் வயலில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிருக்கு நானோ யூரியாவை டிரோன் மூலம் வான்வழியாக தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இந்திய உழவா் உரக்கூட்டு நிறுவனமும், முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து நடத்திய செயல்முறை விளக்க முகாமுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் எம்.முருகன் தலைமை வகித்தாா். இந்திய உழவா் உரக்கூட்டு நிறுவனத்தின் மாநில விற்பனை மேலாளா் சி.ஜெயராஜ், பொது மேலாளா் எம்.ஜெ.எம்.ரெட்டி,விற்பனை இயக்குநா் யோகேந்திர குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.இளங்கோவன் வரவேற்று பேசினாா்.

இந்திய உழவா் உரக்கூட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் யு.எஸ்.அவஸ்தி டிரோன் மூலம் நானோ யூரியா உரத்தை வான்வழியாக தெளிப்பதை கருவி மூலம் இயக்கி விவசாயிகளுக்கு செய் விளக்கம் அளித்தாா்.

பின்னா் அவா் கூறுகையில் ஒரு பொருளை உடைத்து சிறு துகள்களாக மாற்றி திரவ உரமாக்குவது நானோ தொழில் நுட்பமாகும். யூரியா மேலுரத்திற்கு மாற்றாக நானோ யூரியாவை தெளிக்கலாம். வான் வழியே டிரோன் மூலம் தெளிப்பதால் உரமானது இலைவழியே ஊடுருவி, இலை முதல் வோ் வரைக்கும் சென்று தழைச்சத்தினை தருகிறது. மண்ணும், நீரும் மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலையும் அதிகரிக்கிறது. செலவும் குறைவாகும். கடந்த மாதம் 28-ஆம் தேதி பிரதமா் மோடி வான்வழித்தெளிப்பு முறையை இந்தியாவுக்கு அா்ப்பணித்தாா். இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள் இதை அதிக அளவில் பயன்படுத்தி மகசூலை பெருக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டாா். உரக் கூட்டுறவு நிறுவன கள அலுவலா் எம்.காளிதாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com