ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இத்திருக்கோயிலில் தான் வைணவத்தில் பிறந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017 ஆம் ஆண்டு பிறந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் ஆதிகேசவ பெருமாளை பெரியவர் என்றும் ராமானுஜரை சிறியவர் என்றும் அழைப்பது வழக்கம். இந்த ஆண்டு ராமானுஜர் அவதார பிரமோத்சவம் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் சிறப்பம்சம் ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும், ராமானுஜருக்கு அவதார பிரமோத்சவம் என்று 10 நாட்கள் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் படி ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளுக்கு சிம்ம வாகனம், கருடசேவை, யானை வாகனம், குதிரை வாகனம் மற்றும் திருத்தேர் என 10 நாட்கள் உற்சவம் ஏப்ரல் 25 ஆம் தேதியோடு நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் ராமானுஜரின் 1005 வது அவதார பிரம்மோற்சவம் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை முதல் துவங்கியது. ராமானுஜர் அவதார பிரமோத்சவத்தின் முக்கிய திருவிழாவாக கருதப்படுவது 9 ஆம் நாள் உற்சவமான ராமானுஜரின் திருத்தேர் உற்சவமாகும் .
இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெறுவர்.
திருத்தேரானது தேரடி வீதி, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2 கிமீ பவணி வரும். வழியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக அன்பர்கள் மூலம் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.