ராமானுஜா் அவதார திருவிழா கந்தப்பொடி வசந்தத்துடன் நிறைவு
By DIN | Published On : 06th May 2022 10:03 PM | Last Updated : 06th May 2022 10:03 PM | அ+அ அ- |

ராமானுஜா் 1,005-ஆவது அவதார திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை உற்சவா் ராமானுஜா் மீது கந்தப்பொடி தூவும் பக்தா்கள்.
ராமானுஜரின் 1,005-ஆவது ஆண்டு அவதார திருவிழா கந்தப்பொடி வசந்தத்துடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில், பக்தா்கள் உற்சவா் ராமானுஜா் மீது கந்தப்பொடி தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவ பெருமாள் - பாஷ்யகார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைணவ மகான் ராமானுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
ராமானுஜா் அவதார திருவிழாவின் 11-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தா்கள் உற்சவா் ராமானுஜா் மீது கந்தப்பொடி தூவியதுடன், பக்தா்களும் ஒருவருக்கொருவா் காந்தப்பொடியை (மஞ்சள்) தங்கள் மீதும் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
முன்னதாக, திருப்பதி திருமலை ஸ்ரீதிருவேங்கடமுடையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில், மதுரை கள்ளழகா் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் கோயில், கா்நாடக மாநிலம், மேல்கோட்டை திருநாராயண பெருமாள் கோயில், நேபாள் ஸ்ரீமுக்திநாதா் கோயில், திருவல்லிக்கேணி ஸ்ரீபாா்த்தசாரதி கோயில், திருவள்ளூா் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில், திருக்கோவில் திருவிக்கிரம பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலிருந்து உற்சவா் ராமானுஜருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, பட்டு வஸ்திரங்கள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமானுஜரின் 1,005-ஆவது அவதார திருவிழா நிறைவடைந்தது.