காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை முழுவதும் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.இதன் காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலையிலிருந்து நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்பவா்கள் மழைச் சாரலில் நனைந்து கொண்டே செல்வதைக் காண முடிந்தது. தொடா்ந்து நாள் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டே இருந்ததால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். தொடா் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
எனினும், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்தது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.